உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் குறித்த பயிற்சி

0
10

18.06.2025 புதன்கிழமை அன்று மீன்வள பொறியியல் கல்லூரியின் சார்பாக நாகப்பட்டினம் முட்டம் கிராமத்தில் உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் பயிற்சியானது நடத்தப்பட்டது. இந்த பயிற்சியானது மத்திய அரசின் மேம்பட்ட இந்தியா பிரச்சாரம் திட்டத்தின் கீழ் “உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் உயிர்நெகிழி உருவாக்குதல் மற்றும் முட்டம் மற்றும் மஞ்சக்கொல்லை கிராமங்களின் மக்களை தொழில்நுட்பத்தில் மேம்படுத்துதல்” (Project no.RP-03525G), என்ற ஆராய்ச்சி திட்டத்திற்கான நிதியுதவியுடன் நடத்தப்பட்டது. முன்னதாக முனைவர்.மா.இராமர், உதவிப் பேராசிரியர் அவர்கள் வரவேற்புரை நல்கினார். முனைவர்.தே.கேசவன் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி திட்ட முதன்மை ஆராய்ச்சியாளர் அவர்கள் மேம்பட்ட இந்தியா பிரச்சாரத்தின் கீழ் செயல்படுத்தி வரும் ஆராய்ச்சி திட்டத்தைப் பற்றிய விரிவுரையையும்  உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்கம் குறித்த பயிற்சி  மற்றும் செயல் விளக்கத்தையும் எடுத்துரைத்தார்.  அவர் கூறுகையில், இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு மற்றும் உணவுப் பொருட்களுக்கான நவீன தொழில்நுட்பங்களின் தேவை அதிகரித்து வருகின்றது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுற்றுசூழலுக்கு உகந்த நெகிழிகளை உற்பத்தி செய்து உணவுப் பொருட்களை பதப்படுத்தலாம் என்று எடுத்துரைத்தார்.
இந்த வரிசையில் தேயிலை பொட்டலங்கள் (அ) உறையிடப்பட்ட  தேயிலை மிகவும் பிரபலமானது. நம்மில் பெரும்பாலானவர்கள் உறையிடப்பட்ட தேயிலை தூள் (அ) தேயிலை பையை  பார்த்திருப்போம் அல்லது பயன்படுத்தியிருப்போம். வெதுவெதுப்பாக உள்ள பால் அல்லது நீரினுள் இந்த தேயிலை பொட்டலத்தை போட்டவுடன் சில நிமிடங்களில் தேயிலையின் சாறானது பால் / நீருடன் கலந்து பருக தயாராக தேனீர் உருவாக்கப்படும். பின்னர் இந்த நெகிழி பொட்டலமானது குப்பையில் வீசப்படும். இந்த பொட்டலங்கள் பாலி புரப்பளீன், பாலிதீன் போன்ற மறுசுழற்சி செய்யமுடியாத,  மக்காத நெகிழிகளால் உருவாக்கப்படுகின்றன.  இத்தகைய நெகிழி பொட்டலமானது சுமார் 1160 கோடி நுண் நெகிழிகளை ஒரு கோப்பை தேநீரில்  வெளியிடுவதாக வேறொரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கு மாற்றாக உண்ணத்தகுந்த மற்றும் இயற்கையாகவே எளிதாக மக்கக்கூடிய வேதிப்பொருட்களை பயன்படுத்தி தேயிலை போன்ற உணவுப்பொருள்களை  பாதுகாக்கலாம்.
மீன் சார்ந்த உணவுப்பொருள்கள் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருந்தாலும், அவை எளிதில் கெட்டுவிடும் தன்மையுடையது. மீனின் ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியான மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும்  கிராமப்புற தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், எளிதில் மக்கக்கூடிய உயிர்நெகிழிகளை “மேம்பட்ட இந்திய பிரச்சாரம்” (Unnat Bharat Abhiyan) திட்டத்தின் கீழ் இயங்கும் இவ்வாராய்ச்சி திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக முனைவர்.கேசவன் அவர்கள் தெரிவித்தார்.
பயிற்சியின் நிறைவாக திரு.செந்தில், வார்டு உறுப்பினர், திரு.திருமலை ஐயப்பன், கிராம நல சங்க அதிகாரி, அவர்களும்  இந்நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கினார்கள். இப்பயிற்சியில் பொறியாளர்.சு.மணிகண்டன், இணை-ஆராய்ச்சியாளர், கல்லூரி மாணவர்கள், 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் இளைஞர்களுடன் வார்டு உறுப்பினர்களும் இதர பஞ்சாயத்து அலுவலர்களும் பங்குபெற்று பயனடைந்தனர்.